டேவிட் அய்யாவினுடைய நினைவேந்தல் நிகழ்வொன்று கடந்த 06/12/2015 ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் நடந்தது. யாழ்ப்பாண முகமையாளர் அவையினரால் ஒழுங்கு செய்யப் பட்டிருந்த இந்நிகழ்வு, யூரோவில் நிறுவனத் தலைவர், எந்திரி. இராமதாஸ் தலைமையில் அந்நிறுவன மாகாநாட்டு மண்டபத்தில் நடந்தது.
ஓய்வுநிலைப் பேராசிரியர் அ.நவரத்தினராசா, மறவன்புலவு அய். சச்சிதானந்தம் அய்யா, முன்னை நாள் வட-கிழக்கு முதல்வர் அ.வரதராசப் பெருமாள், த.தே.கூ. பா.உ. ஆபிரகாம் சுமந்திரன், முன்னை நாள் பா.உ. சுரேஷ் பிரேமச்சந்திரன், மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.
பி.ப. 3.00 மணிக்கு ஆரம்பமாகிய நிகழ்வு 6.30 மணியளவில் நிறைவெய்தியது. பேசியவர்கள், டேவிட் அய்யாவுடனான தமது பரிச்சயம், நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்கள், அவரது வாழ்க்கையிலிருந்து தாம் கற்றுக் கொண்டவை என்பவற்றை மையமாக வைத்து உரையாற்றினர். வருடாவருடம் அவர் நினைவாக நினைவுப் பேருரை ஒன்றை ஒழுங்கமைப்பது தொடர்பாகவும், அவரால் பாவிக்கப் பட்டு, இங்கு அவர் எடுத்து வர விரும்பிய 200 கிலோ எடையுடைய அவரது நூற்தேட்டத்தை எடுத்து வந்து, அவர் நினைவான ஒரு பகுதியை யாழ். பொது நூல் நிலையத்தில் உருவாக்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது.
டேவிட் அய்யாவினது வாழ்வினைச் சம்பவத் தொகுப்புகளாகவும், சரித்திரமாகவும் பார்ப்பதற்கு அப்பால், இன்றைய தமிழ்ச் சமூகச் சூழலில் அவரது வாழ்வின் தொடர்ச்சியாக அல்லது நீட்சியாக அமையக் கூடிய வாழ்வு எவ்வாறு இருக்கக் கூடும் என்பது பற்றிய உரையாடலை நாம் நிகழ்த்த வேண்டும் என்று தோன்றுகிறது. இன்னொரு வகையில் சொல்லப் போனால், ‘டேவிட் அய்யாவின் வாழ்விலிருந்து எங்கே?’ என்ற கேள்விக்கான விடை தேடும் உரையாடல்.அந்த உரையாடல், டேவிட் அய்யாவின் வாழ்வு மையம் கொண்டிருந்த அடிப்படைகளை அடையாளப் படுத்தி, அந்த வாழ்வனுபத்தினூடாகப் பெற்ற படிப்பினைகளை இனம் கண்டு, இன்றைய சமூக, பொருண்மிய, அரசியல், பண்பாட்டுச் சூழலில் அவரது வாழ்வு போன்றதொரு வாழ்வு எவ்வாறான செல் நெறியைக் கொண்டிருக்கும் அல்லது கொண்டிருக்க வேண்டும் என உசாவும் ஒரு உரையாடலாக அது அமைய வேண்டும்.
மூன்று விடயப் பரப்புகளை மையமாகக் கொண்டு, டேவிட் அய்யாவினுடைய வாழ்வு தொடர்பான உரையாடல், அமையப் பெறலாம்.
ஒன்று: தமிழ் மக்களிடையே சமூக, அரசியற் செயற்பாட்டியக்கங்கள் தோன்றியது மிகக் குறைவு. அரசியற் கட்சிகளும், ஆயுதப் போராட்ட இயக்கங்களும் எம் மத்தியிற் தோன்றினவெனினும், பொது நிலையினராற் தோற்றுவிக்கப் பட்ட சமூகச் செயற்பாட்டு இயக்கங்கள் மிகக் குறைவு. அதனை விட சமூகச் செயற்பாட்டினைத் தமது முழு நேரச் செயற்பாடாக வரித்துக் கொண்டவர்கள் அரிது. டேவிட் அய்யா ஒரு முழு நேரச் சமூகச் செயற்பாட்டாளராக வாழ்ந்தவர். மருத்துவர் இராஜசுந்தரமும் அவரும் இணைந்து உருவாக்கிய காந்தீயம் அமைப்பு மிகக் காத்திரமான பங்களிப்பைச் செய்த சமூக/அரசியலியக்கமாகும். அந்த அனுபவங்களிலிருந்து நாம் எவற்றைக் கற்றுக் கொள்ளப் போகிறோம்? ஒரு சமூகச் செயற்பாட்டியக்கத்தை ஈழத்தின் தமிழ்ச் சூழலில் உருவாக்குவது, முழு நேரச் சமூகச் செயற்பாட்டில் ஈடுபடுவது என்பவற்றிற்கான ஏது நிலைகள், சவால்கள், வெற்றி பெற்ற செயன்முறைகள், தவிர்க்கப் பட வேண்டியவை என்பவை குறித்த உரையாடல்.
இரண்டு: டேவிட் அய்யா போன்ற செயற்பாட்டாளர்கள் ஒரு ‘வாழ்க்கை முறையைத்’ தெரிவு செய்தனர். எழுபதுகளின் ஈழத் தமிழ்ச் சூழல் தொடர்பான டேவிட் அய்யாவின் புரிதலின் அடிப்படையில், அச் சூழலை மாற்றியமைக்க அவர் விருப்பம் கொண்டு, தனக்கென ஒரு வாழ்க்கை முறையை அவர் வரித்துக் கொண்டார். அந்த வாழ்க்கை முறை, அக்காலத்தின் மைய நீரோட்ட வாழ்முறையிலிருந்து வேறுபட்டு இருந்தது. தமது அமைப்புக்கு அவர்கள் தெரிவு செய்த பெயரின் அடிப்படையில் அது காந்தீயத் தத்துவத்தை அடியொற்றிய வாழ்க்கை முறை என்பதை நாம் புரிந்து கொண்டாலும், ஈழத் தமிழ்ச் சூழலில் அவ்வாழ்முறை எவ்வாறு கட்டமைக்கப் பட்டது என்பதை அவர் வாழ்விலிருந்து நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும். மிகச் சுட்டிப்பாக, கருத்து நிலை உருவாக்கம், வாழ்வின் பொருண்மியத் தெரிவுகள், புதிய தனி மனித, சமூக உறவுகளைக் கட்டியெழுப்புதல், இயற்கைச் சூழல் தொடர்பான தெரிவுகள் தொடர்பான அவரின் வாழ்க்கை நடை முறைகள் எவ்வாறு அமைந்தன என்பவற்றை அடையாளம் காண்பதனூடாக, ஒரு மாற்று வாழ் முறையின் சாத்தியம், அதன் அடிப்படைகள் என்பவை குறித்த தெளிவைப் பெறலாம். அவ்வாறான மாற்று வாழ்முறை, ஆன்ம உறுதி, ஒருமித்த உணர்வு, கருத்து நிலைத் தெளிவு என்பவற்றை நோக்கி ஒரு சமூகமாக எம்மிற் பலரை இட்டுச் செல்லுமா? என்பவை குறித்த உரையாடல்.
மூன்று: ஒரு செயற்பாட்டாளருக்கு இருக்க வேண்டிய மன விரிவும், ஆன்மீக முதிர்ச்சியும் குறித்த உரையாடல். கொள்கைப் பிடிப்பிற்கும், செயல் வேகத்திற்கும் அதீத முக்கியத்துவம் வழங்கி, அவற்றின் பின்னால் இருக்கும் உளப் பாங்கையும், உலகியல் நோக்கையும் நாம் கவனமெடுக்காது விடும் போது, புகழையும், அதிகாரக் குவிப்பையும் விரும்பும், தனி மனிதனை மையப் படுத்தும், ஒரு பண்பாட்டு நிலை தோற்றுவிக்கப் படுகிறது. இந்நிலை படிப்படியாக சனநாயகத் தன்மையற்ற நிலைக்கு வழி கோலுகிறது. கொள்கைப் பிடிப்புக்கும், செயல் வேகத்துக்கும் ஈடாக, அனைவரையும் உள்வாங்கிச் செயற்படும், பொதுக் கருத்து நிலையை உருவாக்கச் சதா முயன்று கொண்டிருக்கும், அக விரிவும், உணர்வுச் சமநிலையும், ஆத்ம பலமும் செயற்பாட்டாளர்களுக்கு மிக மிக அத்தியாவசியமானவையாகும். இவை எவ்வாறு உருவாகின்றன? அல்லது உருவாகாமல் விடுகின்றன? இந்த நோக்கு நிலையில், டேவிட் அய்யாவின் வாழ்க்கையை எவ்வாறு அணுகலாம், எவற்றைக் கற்றுக் கொள்ளலாம்? என்பவை குறித்த உரையாடல்.
ஒருவரை அல்லது ஒரு அமைப்பை அவர்தம்/ அதன் கருத்துக்களையும், செயற்பாடுகளையும் பிழையென நிறுவுவதன் மூலம் தான் தமது கருத்தைச் சரியென நிறுவும் ஒரு விவாத முறை, உரையாடல் முறை, கருத்துருவாக்க முறை எம்மத்தியில் வேரூன்றி வருகிற இன்றைய சூழலில், எல்லா மனிதர்களிடமும், அமைப்புகளிடமும், உள்ள சிறப்பானவற்றை அடையாளங்கண்டு, அவற்றை இணைத்தும், தொகுத்தும், உள்வாங்கியும், அவற்றிலிருந்து மேலெழும் இன்னும் சிறப்பான கருத்து நிலையை, வாழ்முறையைக் கட்டியெழுப்பும் வகையில் எமது விவாத முறை, உரையாடல் முறை, கருத்துருவாக்க முறை உருவாக வேண்டும். எமது போதாமைகள் குறித்து எள்ளலுடன் விமர்சித்து, இந்த இனமும், இந்த மக்களும் உருப்பட மாட்டார்கள் என்ற வகையிலான முடிவுகளுக்கு எப்போதும் இட்டுச் செல்ல முனையும் ஒரு உரையாடலிலிருந்து, எமக்குப் புத்துணர்வை, புத்தெழுச்சியை, புத்தாக்க மனவுணர்வை உருவாக்கும் உரையாடலிற்குள் நாம் காலடியெடுத்து வைக்க வேண்டும். அப் புதிய பண்பாட்டின் நுழை வாயிலாக டேவிட் அய்யாவின் வாழ்வு தொடர்பான எமது உரையாடல் அமையட்டும்.