பேசப் பெரிதும் இனியாய் நீயே (பாடல் ஒன்று)
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே (பாடல் எட்டு)
திருநாவுக்கரசர் தேவாரம், ஆறாம் திருமுறை, திருவையாற்றுத் திருப்பதிகம்.
தொண்ணூறுகளின் ஆரம்பப் பகுதி. யாழ்ப்பாணப் பல்களைக் கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீடத்தில் நாங்கள் படித்துக் கொண்டிருந்த காலம். பேராசான் சிவத்தம்பி கொழும்புப் பயணத்தின் போது எமது பீடத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்தார்.
நாங்கள் (விவசாய பீட மாணவர் ஒன்றியம்) கேட்டுக் கொண்டதற்கிணங்க ’70 ஆண்டு சமதர்ம ஆட்சியின் பின் சோவியத்தின் உடைவு: நாங்கள் கற்க வேண்டியவை’ என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடலை எங்களுடன் நிகழ்த்தினார்.
அதன் பின்னர், நாங்கள் ஒரு சிலர் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, சிரேஸ்ட ஆசிரியர்கள் அறைக்கு (Senior Common Room) எங்களை அழைத்து உரையாடினார். அப்போது அங்கிருந்த வேறு பேராசிரியர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
ஒரு சந்தர்ப்பத்தில் சக பேராசிரியரைப் பார்த்து நட்பார்ந்த தொனியில் சிவத்தம்பி சொன்னார், ‘உன்னிலை இருக்கிற பிரச்சனை என்னெண்டால், நீ கடைசியாப் படிச்ச புத்தகத்தில உள்ளது தான் சரி எண்டு நம்பிறது தான். எங்களுக்கெண்டு ஒரு நோக்கு நிலை இருக்க வேணும். அது மாறலாம். ஆனால் ஒண்டைவிட்ட ஒரு நாளுக்கு ஒருக்கா அது மாறக் கூடாது. அப்பிடி மாறினால் அது நோக்கு நிலை இல்லை. எங்கடை சொந்த நோக்கு நிலையிலிருந்து, உலக நடப்புகளை விளங்கிக் கொள்ள முயற்சிக்க வேணும். அதுகளை விளங்கிக் கொள்ள, விளங்கப் படுத்த முடியேல்லை என்றால், நோக்கு நிலையை இன்னமும் ஆழமாக்க வேணும், அகலமாக்க வேணும்’.
இன்றைய உரையாடல் வெளிகளைப் பார்க்கும் பொழுது, நோக்கு நிலையற்ற ஒரு பெரும் கூட்டமே உருவாகி, உலா வருவது துலாம்பரமாகத் தெரிகிறது. எந்த விடயம் குறித்தும் எந்த விதமான ஆழமான, அறிவு பூர்வமான பார்வை இல்லாது வெறுமனே கருத்துச் சொல்லும் முனைப்பு பீறிட்டுத் தெரிகிறது. வார்த்தையாடல்களில் வன்முறை கொட்டிக் கிடக்கிறது.
‘வா எரும’, ‘அடே வெண்ண’, ‘உன்ரை அளப்பறை’, ‘பொத்திக்கினு கிட’ என்பதெல்லாம் மாற்றுக் கருத்தாளர்களை நோக்கிய சொல்லடிகள். சார்பான கருத்துக்களுக்கு, ‘செம’, ‘மாஸ்’, ‘தூள் கிளப்பிட்ட தல’ என்ற சொல்லாடல்கள். KFC சாப்பாடும், Coca Cola கொப்பளிப்பும் என்ற ‘Life Style’.
இரவல் மொழி, இரவற் சொல்லாடல்கள், இரவல் வாழ்முறை, இரவற் சிந்தனை!
உலக மயமாதலின் மினுங்கற் கலாச்சாரத்தால் சலவை செய்யப் பட்ட மூளையிலிருந்து வரும் மலட்டுச் சிந்தனைகள். தங்களுடைய அறியாமைகளையே தங்களின் பதாகைகளாக உயர்த்திப் பிடிக்கும் அப்பாவித்தனம். சுய சிந்தனையிலிருந்து காயடிக்கப் பட்ட கல்விமுறையும், ஊடகக் கருத்தியல் ஆக்கிரமிப்பும் விளவித்த பரிதாபச் சந்ததி. ‘நுனிப்புல் மேய்வதறிவு’, ‘மின்னுவதெல்லாம் பொன்னே காண்’ இரைந்த படியே (கல்)சொல்லெடுக்கிறது!
நோக்கு நிலை தொலைத்த உலகத்தில், செவிகளைப் பொத்தி, விலகிச் செல்வதை விட வேறென்ன செய்யலாம்?