சனி, 29 டிசம்பர், 2018

மாயமான்- சமூக மாற்றமும் வாழ்வியல் நோக்கும்


சமூக மாற்றம் புரட்சிகளால் சாத்தியப் படும் என்று ஆழமாக நம்பிய தலைமுறையினரில் நானும் ஒருவன். அக்டோபர் புரட்சி, சீனப் புரட்சி, கியூபப் புரட்சி என எல்லா வகையான புரட்சிகளினாலும் ஆகர்சிக்கப் பட்ட ஒரு தலைமுறையைச் சேர்ந்தவன். புரட்சிகளால் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. அதிகார மாற்றங்கள் நிகழ்ந்தன. கொள்கை மாற்றங்களும், கட்டமைப்பு மாற்றங்களும் நிகழ்ந்தன. ஆனால் சிந்தனை மாற்றமும், மன மாற்றமும் நிகழவில்லையோ எனப் பின் வந்த நிகழ்வுகள் எனக்குள் கேள்விகளை எழுப்புகின்றன. 

புரட்சிகளால் விழைந்த மாற்றங்கள் நீடித்து நிலைத்து நிற்க முடியாமைக்கு, எதிர்ப் புரட்சிக் கருத்துக்கள் விதைக்கப் படக் கூடிய தளம் ஒன்று உருவாவதற்கு, வாழ்வியல் தொடர்பான சிந்தனை, மனப்பாங்கு என்பவை மாற்றமடையாமல் இருந்தது காரணமாக இருக்கலாம் என நான் ஐயுறுகிறேன். மாற்று முறைமை எதுவும் சாத்தியமற்றது என்ற நம்பிக்கை ஆழமாக வேரூன்றியுள்ள, உலக மயமான முதலாளித்துவக் கால கட்டத்தில், மாற்றுக் குறித்துச் சிந்திக்க விழையும் எவரும், வாழ்வு தொடர்பான எமது நோக்கு நிலையை, சிந்தனையை மறு பரிசீலனை செய்யாது, மாற்று முறைமை குறித்துச் சிந்திக்க முடியாது.

இன்று மேலோங்கியுள்ள வாழ்வியல் நோக்கு என்பது, வாழ்க்கையின் வெற்றியை அதிக நுகர்வு, அதிக உடைமை, அதிக முதலீடு என்பவற்றுடன் இறுகத் தொடர்பு படுத்தியுள்ளது. நாங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நுகர்கிறோமோ, எவ்வளவு பொருட்களை வாங்கிக் குவிக்கிறோமோ, முதலீடுகளை மேற்கொள்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நாங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக நம்பவைக்கப் படுகிறோம். அதிக நுகர்வையும், அதிக உடைமையையும், அதிக முதலீட்டையும் சாத்தியமாக்க, நாம் அதிக வருமானத்தை முதலில் பெறவேண்டும். அவ்வாறு அதிக வருமானம் பெற வேண்டுமானால், அதிகமதிகம் உழைக்க வேண்டும். இதற்காகக் கடின உழைப்பும், சாமர்த்திய உழைப்பும் விதந்துரைக்கப் படுகின்றன. 
 




எந்த அளவிற்குக் கடுமையாக உழைக்க வேண்டும்? எந்த அளவிற்குச் சாமர்த்தியமாக உழைக்க வேண்டும்? அதற்கென தனித்த அளவீடு இல்லை. தனித்த நியமங்கள் இல்லை. ஒப்பீட்டு அளவீடுகளும், நியமங்களும் தான் உண்டு. என்ன ஒப்பீடு? மற்றவர்களை விடக் கடுமையாக, மற்றவர்களை விடச் சாமர்த்தியமாக, உழைக்க வேண்டும். அவ்வளவுதான்.

ஆக நாங்கள் தனிமைப் படுத்தப் படுகிறோம். மற்றவர்களை விட நாங்கள் முதன்மையானவர்கள் என்ற நிலையைப் பெற, இந்தத் தனியனாகு முறைமை அவசியம். எனது தனிப்பட்ட திறன்கள், எனது தனிப்பட்ட அறிவு, எனது தனிப்பட்ட வல்லமை என்பவற்றை நான் மற்றவர்களுடன் பகிராது வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றைய மனிதனின் தோல்வியின் மீதே என் வெற்றிக்கான அத்திவாரம் இடப் படுகிறது. கல்வி பரீட்சைகள் மூலம் வெற்றியாளனை அடையாளம் காண்கிறது. நிறுவனங்கள் ‘செயற்பாட்டு மதிப்பாய்வு’ மூலம் வெற்றியாளனை அடையாளம் காண்கின்றன. கூட்டு மனநிலைக்கு இங்கு இடம் இல்லை. தனி மனித வெற்றியே அனைத்திற்குமான அடிப்படை என்ற கருத்தியல் எங்கள் மூளைகளுக்குள் செதுக்கப் பட்டு விட்டது. 
 
 

அதிக நுகர்வு, அதிக உடைமை, அதிக முதலீடு-இவற்றைச் சாத்தியமாக்குவதற்கான முன் நிபந்தனையான அதிக வருமானம், அந்த வருமானத்தை ஈட்டுவதற்கான உழைப்பு, மற்றவர்களை வெல்லும் முனப்பிலான உழைப்பு, இன்றைய வாழ்வை, இந்தக் கணத்தின் மகிழ்ச்சியைத் தொலைத்து விடுகிறது. மகிழ்வு எப்பொழுதுமே தொலைவில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் இருப்பதாகவும் அனுமானித்து, அதனை நோக்கிய பதட்டமான ஓட்டத்தில், மற்றையவர்களை முந்திச் செல்லும் எத்தனிப்புடனான பதட்டமான ஓட்டத்தில், நிகழ்கால வாழ்வைத் தொலைத்து விடும் வாழ்முறையை நாம் வரித்துக் கொண்டுள்ளோம். அதனையே சாசுவதம் என ஏற்றுக் கொண்டுள்ளோம்.

இந்தக் கணம் எங்களுக்குத் தரக்கூடிய மகிழ்ச்சியை நாம் புறமொதுக்கி விட்டோம். எம் வீட்டு முற்றத்தில் இதழவிழும் மலரின் அழகு, எம் வீட்டுக் கொல்லையில் ஒலிக்கும் புள்ளினங்களின் ஒலி, ஒரு மழலையின் குமிண் சிரிப்பு, எம் வீட்டாரின் உடல் நலம், எம் வீட்டுக் கொடியில் விழைந்த காய், எம் வீட்டு மரத்தில் கனிந்த பழம், இவையெல்லாம் தரக் கூடிய மகிழ்வை மகிழ்வாகக் கருதக் கூடிய மன நிலையில் நாங்கள் இல்லை.  
 

இப்படியான வாழ்வியலை வரித்துக் கொண்டு, நாங்கள் மகிழ்வாகவும் இருக்க முடியாது, நேர்மையாகவும் இருக்க முடியாது. மாற்றம் குறித்துச் சிந்திக்கவும் முடியாது. சமூக மாற்றம் குறித்துக் கரிசனை கொண்ட எவரும், தம் சொந்த வாழ்வின் நோக்கு நிலையை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். மகிழ்வான வாழ்வின் தரிசனத்தை, அதன் பூரணத்துவத்தை சுய வாழ்வில் உணராது, மற்றவர் வாழ்வில் மாற்றம் கொண்டுவருவது குறித்து எவரும் பேச முடியாது. 
 
 
 
எமக்கு இப்போ வேண்டுவதெல்லாம் ஒரு ஐந்தொகை. எமக்கான மகிழ் தருணங்களை உருவாக்கக் கூடிய மனிதர்கள் யார்? எவர் முகங்கள்? எவர் மனங்கள்? எவர் கரங்கள்? மகிழ் தருணங்களை உருவாக்கக் கூடிய ‘பல்லினங்கள்’ எவையெவை? நிற்பவை எவை? நடப்பவை எவை? ஊர்வன எவை? பறப்பவை எவை? நீந்துபவை எவை? மகிழ் தருணங்களை உருவாக்கும் இயற்கையின் இடங்கள் எவை? எந்த வனத்தின் தருக்கள்? எந்த நதியின் புனல்? எந்தக் குளத்தின் கரை? எந்தக் கடலின் அலை? எந்த வயலின் வெளி? மகிழ் தருணங்களை உருவாக்கும் செயல்கள் எவை? காலை நடையா? மண் விழும் வியர்வையா? கை கொடுக்கும் கரங்களா?
 
 
இவற்றைத் தேடித் தெளிந்து, வாழ்வின் மகிழ்வை, அர்த்தத்தை இந்தக் கணத்தில் அடையாளப் படுத்தாது, அது தொலைவில் தான் உள்ளது என்று நம்பி, ஓடுவதே வாழ்வு என்று வரித்துக் கொண்டால், மாற்றம் மாயமானாகவே இருந்துவிடப் போகிறது. 

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

துலா

அண்மையில் பொத்துவில் போயிருந்த பொழுது தான் துலாவைப் பார்த்தேன். துலாவைப் பார்த்துக் கன காலம் ஆகியிருந்தது அப்பொழுதுதான் உறைத்தது.

பொத்துவிலில் துலா பார்த்தது தியாகு அண்ணை வீட்டில். கடை நடத்த யாழ்ப்பாணத்திலிருந்து பொத்துவில் போனவர் இப்போ பொத்துவில் வாசி. அவருடைய பிள்ளைகளில் இருவர் லண்டனில். ஒரு மகள் தம்பிலுவிலில் திருமணம் செய்து அங்கிருப்பதாகச் சொன்னார்.

அவரும் மனைவியும் மட்டும் பொத்துவிலில் இருக்கிறார்கள். நாங்கள் போனபோது 'கொமேட்' வைத்த 'பாத்றூம்' கட்டப் பட்டுக் கொண்டிருந்தது. பேரப் பிள்ளைகள் லண்டனிலிருந்து வந்து வீட்டில் தங்க வேணுமெண்டால் அது ஒரு முன் நிபந்தனையாகி விட்டதை அவர் சொன்னார். கிணற்றுக்கு இன்னும் 'மோட்டர்' போடவில்லை. துலா மட்டும் தான்.



அதற்கு முதல் துலாவைப் பார்த்தது தில்லையம்பலப் பிள்ளையார் கோவிலில். சின்ன வயதில் எல்லா இடமும் துலா இருந்தது. உசனில் மடத்துக்குப் பின்னால் இருக்கும் நல்ல தண்ணிக் கிணற்றுக்கும் துலா இருந்தது. கந்தரோடையிலிருந்து சுன்னாகத்திற்கு அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து போகும் பொழுதுகளில், 'இரண்டு துலாக் கிணத்தடியை' கடந்து போவது மெலிதாக ஞாபகமிருக்கிறது. இப்ப கிணறும் இல்லை, துலாவும் இல்லை. இரண்டு துலாக் கிணத்தடி இருந்த சுவடும் இல்லை.

துலாவைப் பற்றிய நினைவு வரும் பொழுது, விடிகாலையில் வழமையாகத் துலா மிதிக்க வருபவனைப் போல வந்து, தோட்டத்திற்குத் தண்ணி கட்ட, மனிதர்களைப் பேய் கூட்டிக் கொண்டு போனதான சின்ன வயதுப் 'பேய்க்கதைகள்' ஞாபகம் வரும். 

அந்த ஞாபகம் வந்தால், ரஞ்சகுமாரின் 'கோளறுபதிகம்' ஞாபகம் வரும். 
 
"ஒரு தடவை மற்றவர்களை விட நல்ல அலம்பர் வெட்ட வேண்டும் என்ற அவாவில் அப்பு காட்டுக்குள் வெகுதூரம் போய்விட்டார். அப்புவுக்கு அப்போ நல்ல வாலிபம். மல்லன் போல உடல் கட்டு. கல்யாணமாகி எனது அம்மா பிறந்து அப்போது தான் தவழ்கிறாளாம். அப்புவின் வாழ்க்கையில் உல்லாசம் வீசுகின்ற காலம், நல்ல பாரமாக அலம்பர் வெட்டி விட்டார். மற்றவர்களுக்கெல்லாம் பொறாமை. அப்புவையும் அவரது பிரசித்தி பெற்ற 'வடக்கன்' களையும் விட்டு விட்டு அவர்கள் முன்னே வண்டிகளை ஒட்டிச் சென்று விட்டார்கள். அப்பு இரண்டு மூன்று 'கட்டை' பின் தங்கிவிட்டார். அக்காலங்களில் அப்புவுக்குப் பயமே கிடையாது. வாலிபம் அல்லவா?

நிலவு பகல் போலக் காய்கிறது. அப்போ தார் ரோட்டுகள் கிடையாது. குண்டுங் குழியும் புழுதியும் நிறைந்த மக்கி ரோட்டுக்களும், வண்டிப் பாதைகளும் தான். வண்டி நிறைந்த பாரம். 'வடக்கன்'கள் முக்கித்தக்கி இழுக்கின்றன. வண்டி அப்படியும் இப்படியுமாக இலேசாகத் தாலாட்டுகிறது. பாதையின் இருபுறமும் தாழம்புதர்கள் மலர்ந்திருந்ததால் 'கம்'மென்ற வாசனை. கண்டல் மரங்கள் நீருக்குள் முக்குளித்து நிமிர்ந்தன. நீரில் கண்டல் சாயம் ஊறி தேயிலைச்சாயம் மனோரம்யமான சிவந்த நிறம் காட்டுகிறது. காற்று வேறு மெல்ல வீசிற்று. தனிமை தந்த சலிப்பும் ஏக்கமும் வாட்டுகிறது. அப்புவுக்கு பாட்டு வந்தது. பாடத் தொடங்கினார். 

வயல் வெளிகளும் சிறுபற்றைகளும் மாறிமாறி வருகின்றன. அப்புவை நோக்கிக் கையசைத்து பின்னால் போய் நின்று திரும்பிப் பார்த்தன. வயல்வெளிகளினூடாக யாரோ ஒருவன் நொண்டி நொண்டி வருகிறான். செம்பாட்டு மண்ணில் விழுந்து புரண்டவன் போல பழுப்புநிற வேட்டி கட்டியிருக்கிறான். வந்தவன், வாய்பேசாமல் பிண்ணியத்தில் பிடித்து தூங்குகிறான். பின்பாரம் மிக அதிகா¢த்து மாடுகளை தூக்க எத்தனித்தது. மாடுகளின் வாயிலிருந்து வெண்நுரை கக்கிற்று. அப்பு திட்டினார். 

"வேசைபிள்ளை, எடடா கையை... துவரங்கம்பாலை வெளுப்பன்."

அவன் முன்னால் வந்தான். வந்தவன், நுகத்தடியில் ஏறி உட்கார்ந்தான். அவனுடலிலிருந்து கெட்ட நாற்றம்- மலநாற்றம் வீசிற்று. மாடுகள் வெருண்டடித்தன. கதறின. பாரம் தாங்காமல் முன்னங்கால்களை மடித்து விழுந்தன. அப்புவுக்குச் சினம் பொங்கிற்று. 

"எளிய வடுவா..." என உறுமியபடி, ஆசனத்திலிருந்தபடியே எட்டி அவனது முதுகில் துவரங்கம்பால் சாத்தினார். கூர்மையான குரலில் ஓலமெழுப்பியபடி அவன் பாய்ந்து இறங்கினான். அப்போது கோடை வானம் கிழியும்படி ஒரு மின்னல் தெறித்தது. மின்னல் ஒளியில் வந்தவனை அப்பு நன்றாகக் கண்டார். வானத்துக்கும் பூமிக்குமாக அவன் பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருந்தான். சில நொடி கழித்து பெரும் இடியோசை கேட்டது. அத்துடன் கூடவே அப்புவின் நெஞ்சில் பலத்த உதை கிடைத்தது. வண்டியின் துலாவில் அப்பு மயங்கிச் சாய்ந்தார். எப்படி வீடு வந்து சேர்ந்தோமென அப்புவுக்கு இப்போது தெரியாதாம். அதெல்லாம் அவரது பாதைபழகிய அருமையான வடக்கன் மாடுகளின் மகிமை என நன்றியுடன் சொல்லுவார். 

"நீ பேயைக் கண்டா என்னடா செய்வாய்?" என்று அப்பு எகத்தாளமாய்க் கேட்பார். 

"பயத்திலை கழிஞ்சு போடுவாய்" என பொக்கைவாய் சிரிக்கும். 

"இப்ப உந்த மெஷினுகள் வயலுகளுக்கை ஒண்டுபாதி சாமமெண்டும் பாராமல் உழுது உழுது பேய்பிசாசெல்லாம் எந்தப் பக்கம் போனதெண்டு சொல்லேலாமல் போவிட்டுது" என மிக வருத்தத்துடன் முத்தாய்ப்பு வைப்பார். "

பேய் பிசாசெல்லாம் போன மாதிரி துலாக்களும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டன,எங்கள் வாழ்க்கையிலிருந்து.
 
தியாகு அண்ணரின் கிணற்றில் ஒரு வாளி தண்ணீர் அள்ளினேன். ஒவ்வொரு நாளும் அள்ளிக் குளித்தால், ஜிம்முக்குப் போகத் தேவையில்லை.

மோட்டர் பூட்டி, ராங்கில தண்ணி ஏத்தி, பாத்றூமிலை குளிப்பது வசதி.

வசதியும், சந்தோசமும் ஒன்றை இழந்து தான் மற்றொன்றைப் பெற வேண்டும் என்பதான விடயங்களாகி விட்டனவா?

திங்கள், 19 பிப்ரவரி, 2018

கேட்க ஒரு நாதி: பகுதி 2

ஒரு கருத்து நிலைக்கு அல்லது நடவடிக்கைக்கு அல்லது முறைமைக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வன்முறையற்ற, தார்மீக, சனநாயக நெறி சார்ந்த வடிவங்கள் பலவற்றுள் ஒன்றே, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். அவ்வாறான ஓர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் தார்மீக உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.



இது போன்றதொரு அமைதி வழி நடவடிக்கையே, இம் மாதம் நான்காம் நாள், இலங்கையின் பிரித்தானியத் தூதரகத்தின் முன் நிகழ்ந்தது. அதையொட்டி நடை பெறும் வாதப் பிரதிவாதங்களில், ஒரு தரப்பினர் இவ்வாறான நடவடிக்கைகள் 'உசுப்பேத்தும்' வேலை என்ற வாதத்தையும், புலம் பெயர்ந்த மக்கள் கோழைகள் வேண்டுமென்றால் இங்கு வந்து ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தட்டும், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமை அவர்களுக்குக் கிடையாது என்பது போன்ற வாதங்கள் முன் வைக்கப் படுகின்றன.

  1. இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்துவதால் தாயகத்திலுள்ள மக்களே பாதிப்படைவார்கள் என்பது பிரதான வாதம். இந்த வாதத்தை முன் வைப்பவர்கள் மறைமுகமாக ஒப்புக் கொள்ளும் உண்மை ஒன்றுள்ளது: 'தாயகத்தில் அடிப்படையான சனநாயகச் சூழ்நிலை இல்லை. அதனால் தான், எங்கோ நிகழும் ஒரு அற வழி எதிர்ப்புக்கு, இங்கே வன்முறை வழி பதிலடி கிடைக்கிறது அல்லது கிடைக்கும் ஏது நிலை உள்ளது.' அவ்வாறு நாம் அடக்கு முறையின் கீழ் இருக்கிறோம் என்றால், அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதும், செயற்படுவதும் அதிலிருந்து விடுபட முனைவதும் தார்மீகமானதே. அதுவே மானிடத்தின் அடிப்படை இயல்பு. கட்டின்றி இருத்தல் ஒரு பெரும் மானிடக் கனவு.
  2. துணிவிருந்தால் இங்கே வந்து ஆர்ப்பாட்டம் நிகழ்த்துங்கள் என்பது அடுத்த வாதம். ஒரு மனிதக் கூட்டத்தினர் நேரடியாக அடக்கு முறைக்கு ஆளாகும் போது, நேரடி அடக்கு முறைக்கு ஆளாகாதோர், தமக்கு இருக்கும் சனநாயக வெளியைச் சாதகமாகப் பயன் படுத்தி, எதிர்ப்பைக் காட்டுவது வழமை. அதன் நோக்கங்கள் இரண்டு: ஒன்று- உலகின் மனச் சாட்சியைத் தட்டிக் கேட்பது. இரண்டு- அடக்கு முறைக்கு ஆளாகும் மக்களுக்குத் தமது தோழமையுணர்வை வெளிக்காட்டுவது. நீங்கள் தனியே இல்லை என்ற செய்தியைச் சொல்வது. இதே மண்ணில் நாங்கள், எண்பதுகளில் மண்டேலாவின் விடுதலைக்காகவும், பாலஸ்தீன விடுதலைக்காகவும் ஆர்ப்பாட்டங்கள் செய்தோம். ஆகவே இது துணிவு/ துணிவின்மைப் பிரச்சனை அல்ல. இருக்கும் சந்தர்ப்பங்களைப் பயன் படுத்தி அடக்கப் படும் மக்களுடன் தம்மை அடையாளப் படுத்துவது.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

கிராம்சியைத் துயிலெழுப்புதல்

'எழுந்த ஞாயிறு விழுவதன் முன் கவி பாடியது எழு நூறே'

மிகப் பெரும் காப்பியமான இராமாயணத்தை, மிகக் குறுகிய காலத்திற்குள், கம்ப மகாகவி தமிழில் பாடினார் என்பதும், சூரியன் எழுந்து பின் விழுவதன் முன் எழுநூறு செய்யுட்களைப் பாடியே அவர் இதனை ஒப்பேற்றினார் என்பதுவும் ஐதீகம்.

இன்றைக்கும் அப்படித்தான். இலங்கைத் தேசிய இனப் பிரச்சனைக் களத்தின் தமிழ்ப் பக்கத்திற்கு, 'எழுந்த ஞாயிறு விழுவதன் முன்' பல்வேறு கருத்தாக்கங்கள் அசுர வேகத்தில் வந்துகொண்டிருக்கின்றன. கருத்தாக்கச் செயற்பாடு மிகத் தீவிரமாக நிகழ்கிறது.

எவ்வாறான கருத்தாக்கச் செயற்பாடு?

ஆளப் படுவதற்கும், அடங்கிக் கிடப்பதற்குமான சம்மதத்தை 'உற்பத்தி' செய்யும் கருத்தாக்கச் செயற்பாடு.

  1. தமிழ் மக்களுக்குப் பேரம் பேசும் சக்தி கிடையாது. இனிக் கிடைப்பதற்கான சாத்தியங்களும் இல்லை. எனவே 'தருவதை' வாங்கிக் கொள்வதே உசிதம்.
  2. முப்பது வருடப் போரினால் என்ன பயன்? இப்பொழுது எமக்குத் தேவை அபிவிருத்தியே. அரசுடன் இங்கிதமாக நடந்து கொள்வதுதான் அபிவிருத்திக்கு ஒரே வழி. சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை போன்ற 'பாரிய அபிவிருத்திகள்' அரசுடன் இணைந்து நடந்தமையால் தான் எமக்குக் கிடைத்தன. ஏன் சிற்றூழியர் நியமனங்களும் தான். அபிவிருத்திக்கு அரசியல் ஆகாது. ஆகையினால் ஆள்பவர்களின் மனம் கோணாது நடக்கக் கடவீர்களாக.
  3. 'தீர்வு' பெறுவதும், 'அபிவிருத்தி' செய்வதும் கூட மக்கள் பொறுப்பல்ல. 'மெத்தப் படித்தவர்களை', 'யானைகளை' அல்லது 'வீணைகளை' தெரிவு செய்து விடுவோம். அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
  4. கொள்கை, இலட்சியம் எல்லாம் காலத்திற்கொவ்வாதவை. தனி மனித முன்னேற்றமே சுபீடசத்திற்கான வழி. 'கண்டறியாத' கொள்கைகளையும், இலட்சியங்களையும், தூக்கியெறிந்து விட்டு, கல்வியில், தொழிலில், வாழ்வில் முன்னேறி உச்சம் தொடுவோம். 'பொது வேலை' கறிக்குதவாது.
  5. எல்லாவற்றிற்கும் மேலாக 'உசுப்பேத்தக் கூடாது'. சரி/பிழை, நியாயம்/அநியாயம் பற்றியெல்லாம் கதைத்து, சனங்களின் மனங்களைக் குழப்ப வேண்டாம். 'அட்ஜஸ்ற்' பண்ணிக் கொண்டு, சமாளித்துக் கொண்டு போங்கோ.
பேச்சுக்களில், எழுத்துக்களில், நிலைப் பதிவுகளில், விவாதங்களில், உரையாடல்களில் என எல்லாத் தளங்களிலும் நிகழ்கிறது இந்தச் 'சம்மத உற்பத்தி' (Manufacturing Consent).

யாரிதைச் செய்கிறார்கள்?

இரண்டு தரப்பினர்.

ஒன்று: தெளிவான அரசியல் அட்டவணையுடன் இயங்குபவர்கள். உலகமயமாக்கல், தொழில்/வணிக விருத்தி, சந்தைகளின் விரிவு, வளச் சுரண்டல், என்பவற்றின் பிரதான எதிரிகள்: சமூக உணர்வு, வர்க்க உணர்வு, தேசிய உணர்வு. எனவே இவற்றை மக்கள் மனக்களிலிருந்து அகற்றி, மக்களை- அரசியல், சமூக, வர்க்க, தேசிய- 'நலமடித்து' விட வேண்டும் என்ற தெளிவான குறிக்கோளுடன் இயங்கும் 'அரசியற் சமுகம்' (Political Society). அரசு, ஆள்பவர் நலன் சார்ந்த அரசியற் கட்சிகள், அவர்கள் நலன் சார்ந்து இயங்கும் தொழில் முறைப் புலமையாளர்கள் (Traditinal Intellectuals).

இரண்டு: நாங்கள். நானும், நீயும், அயலவனும். இந்த உலகை, அரசியலை, சமூகத்தை, பண்பாட்டை, அறிவியலை, 'சனரஞ்சகமாகப்' புரிந்து கொண்டிருக்கும், நாங்கள். 'அவர் நல்லவர்', 'இவர் வல்லவர்' என்ற அடிப்படையில் தலைவர்களையும், 'வாழ் நாள் முழுமைக்கும் விசுவாசிப்பிற்கான கட்சி' என்ற அடிப்படையில் அரசியற் குழுக்களையும் மேலோட்டமாகப் புரிந்து கொண்டு, அந்தப் புரிதலின் அடிப்படையில் கருத்தாடுபவர்கள். சிவில் சமூகத்தினர் (Civil Society). வாழ்முறைப் புலமையாளர்கள் (Organic Intellectuals).

உலகம், சமூகம், பொருளியல், பண்பாடு, கல்வி, அறிவு என்பன குறித்த, ஆழமற்ற, 'சனரஞ்சகமான' புரிதல் தான் உலகெங்கிலுமுள்ள ஆள்பவர்களின் ஆயுதம். பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள் என்பவற்றின் ஊடாக, 'நுனிப் புல் மேயும்' சமூக மனிதர்களை அவர்கள் உருவாக்குகின்றனர். அதன் விளை பொருட்களாகிய நாங்கள், எம்மையறியாமல், அவர்களின் கருத்தியலை மறு உற்பத்தி செய்கிறோம்.

"ஆனாலும்
கைவிரல்கள்
எதிரி முகாமில் எழுந்தொலிக்கும் பாடலுக்கு
றைபிள் துடுப்பில்
தம்மை மறந்து தாளங்கள் போட்டபடி" 
(வ.ஐ.ச ஜெயபாலன். பாலஸ்தீனத்தின் கண்ணீர்)

இன்றைய எமது தேவை, இந்த மட்டுப்பாடுகளைக் கடந்த, நீதியின் பால் நிற்கக் கூடிய, அற வழி சிந்திக்கக் கூடிய, புலமையாளர்கள் தான். அடக்கப் படும் சமூகம் தனக்கேயுரிய மரபுப் புலமையாளர்களையும், வாழ்முறைப் புலமையாளர்களையும் உருவாக்கி, விடுதலைக் கருத்தியலை மக்கள் மனங்களில் கட்டியெழுப்புவதுதான், தளைகளிலிருந்து மீள்வதற்கான வழி.

தார்மீக அடிப்படையில் வேரூன்றி, தர்க்கீக வெளியில் கிளையெறிந்து நிற்கக் கூடிய, நீதியின் பாற்பட்ட புலமை மரபொன்றை உருவாக்க வேண்டியது எனதும், உனதும் கடன்.

அந்தோனியோ கிராம்சியைத் துயிலெழுப்பி அவரிடமிருந்து கற்றுக் கொள்ளுவோம்.



(அந்தோனியோ கிராம்சி 1891-1937 ஒரு இத்தாலிய மார்க்சிசச் சிந்தனையாளர். ஆள்பவர்கள் வன்முறை, பலவந்தம் என்பவற்றிற்கு மேலாக, தமக்குச் சாதகமான, தமது ஆட்சியை ஏற்றுக் கொள்ளும் சம்மதத்தை மக்கள் மனங்களில் உற்பத்தி செய்கிறார்கள். அந்தக் கருத்தியல் மேலாதிக்கம் தான் (Ideological Hegemony) அவர்களின் பிரதான பலம். இந்த மேலாதிக்கம் உருவாவதற்கு, சிவில் சமூகத்தைச் சேர்ந்த, வாழ்வியற் புலமையாளர்களே பெரும் பங்கு வகிக்கின்றனர். ஆகவே மாற்றத்தை விரும்பும் எந்தச் சமூகமும், ஆள்பவர்களின் கருத்தியல் மேலாதிக்கத்துடன் இடைவினை புரிந்து, மாற்றுக் கருத்தியல் தளத்தை உருவாக்கக் கூடிய சிவில் சமூக, வாழ்வியற் புலமையாளர்களை தனக்கென உருவாக்க வேண்டும் எனக் கருதினார் கிராம்சி. அவரது சிந்தனைகள் பற்றிய விரிவான பதிவு பின்னர்)
 
 
 
 
 



வியாழன், 15 பிப்ரவரி, 2018

பேனாக்கள் மை சிந்தட்டும்

உறங்கப் புகும் பொழுதில், ஒரு தனி நுளம்பு காதருகில் ரீங்காரமிடுவதைப் போலத் தொல்லை தருகின்றன, தேர்தற் கால உரையாடல்கள். தேர்தல் மேடைகளில், பத்திரிகைப் பத்திகளில், சமூக வலைத்தள அக்கப் போர்களில் என அங்கிங்கெனாதபடி அறியாமையின் உடுக்கொலி ஓங்கி ஒலிக்கிறது. விரல் விட்டெண்ணக் கூடிய சில குரல்களைத் தவிர, மற்றவையெல்லாம், அறியாமையின் அல்லது அறிய விரும்பாமையின் பேரொலிகளாகவே இருந்தன.

நீரெனவும் நீரையும், பாலெனவும் நீரையும் அள்ளி வழங்கி விட்டு, பாலெது? நீரெது? எனப் பகுக்கும் அன்னப் பறவைகளின் வித்தை காலவதியாகி விட்டது என்று பிரகடனப் படுத்தியிருக்கிறார்கள் சில இணையத் தளப் 'புற்றீசல்' தத்துவ வித்தகர்கள்.

இந்தத் தத்துவ வித்தகர்கள் கூற விழைவது என்ன? 1940 களில் எழுதப் பட்ட ஜோர்ச் ஓர்வெல்லின் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து நான்கு என்ற நவீனத்தில் அவர் தீர்க்க தரிசனத்துடன், முரண் நகையாகக் கூறிய விடயங்கள் தான்.

யுத்தமே சமாதானம்
War is Peace
அடிமைத்தனமே சுதந்திரம்
Slavery is Freedom
அறியாமையே பலம்
Ignorance is Strength

முள்ளி வாய்க்கால் முடிவே சுபீட்சத்தின் பெரு வாசல். 'ஏக்கிய ராஜ்ஜிய' வே சரி நிகர் சமான வாழ்வு. யதார்த்தமே சாசுவதம்.


சனி, 10 பிப்ரவரி, 2018

யானை பார்த்தல்

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான, சமூக வலைத்தள உரையாடல்களை, தொடர்ந்து, மௌனமாக அவதானித்து வந்தேன். அந்த உரையாடல்கள் குறித்து வருத்தமும், ஏமாற்றமுமே இறுதியில் எஞ்சி நிற்கின்றன. ஏன் இப்படியானோம்?



இப்போதைக்கு இரண்டு காரணங்களை அடையாளம் காண முடிகிறது.

ஒன்று: சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகள், போக்குகள் குறித்த எமது சமூகத்தினதும், தனித்தவர்களினதும் புரிதல் மிக மேலோட்டமானதாக இருக்கிறது. அவற்றில் பொதிந்திருக்கும் ஆழமான அர்த்தங்கள், சிக்கலான இடைத்தொடர்புகள், அவற்றைப் பகுதிகளாக அன்றி முழுமையாக நோக்கும் முறைமை, என்பன தொடர்பாக நாம் நிதானித்துச் சிந்திக்கப் பழக்கப் படவில்லை. எமது கல்வி முறையும், ஊடகத் தரமும், இதற்குக் காரணமாக அமையலாம். இவ்வாறான, எளிமைப் படுத்தப் பட்ட, துண்டு துண்டான, நேர்கோட்டுப் புரிதலின் அடிப்படையிற்றான் எமது கருத்தாடல்கள் கட்டியெழுப்பப் படுகின்றன. விழியிழந்தோர் 'யானை பார்த்த' நிலைக்கு ஒப்பானதாக எமது நிலை ஆகி விடுகிறது.

இரண்டு: மேற்சொன்னது போன்ற பலவீனமான புரிதல்களின் அடிப்படையில் எமது விளக்கங்களைக் கட்டியெழுப்பும் போது, பலவற்றை விளக்க முடியாது போய்விடுகின்றது. என்றாலும், உரையாடல்களில் விவாதத் தன்மையும், அதில் வெல்லும் முனைப்பும் மேலோங்கும் போது, பரஸ்பர வசை பாடலில் உரையாடல் சென்று முடிகின்றது. உரையாடல்களினூடாக எய்தப் பட வேண்டிய பொதுப் புரிதலிற்கும் பதிலாக, விவாத வெற்றி முனைப்புக் காரணமான காழ்ப்புணர்வே எஞ்சுகின்றது.

தவிர்க்கப் பட முடியாத, நவீன உரையாடல் வெளியான சமூக வலைத் தளப் பரப்பில், காத்திரமாகக் கருத்தாடக் கூடிய சிலராவது எமக்கு இன்று அவசியம் தேவை. 

திங்கள், 15 ஜனவரி, 2018

காலத் துயர்

முரசம் அதிர்ந்தது.

மகா சனங்களே...

முரசறைவோன் சேதி சொல்லத் தொடங்கினான். ஆலமரத் தலைவனின் செய்தி.


____________________________________________________________________________

ஆல மரமோவெனின் ஒரு முது மரம். கீர்த்தி மிகு தரு.

நூற்றிருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக, வேரோடிக், கிளை பரப்பி, விழுதெறிந்த பெரு மரம்.

அண்ணல் யானை, அணி தேர் புரவி, ஆட் பெரும் படையுடன் மன்னர்க்கிருக்க நிழலாக வல்ல தரு.

தெண்ணீர்க் கயத்துச் சிறு மீன் சினையினும் நுண்ணிதேயான அதன் விதைகள், ஒன்றே கால் நூற்றாண்டுகளாய் உலகெங்கும் பரவியிருந்தன.

ஆல மரமோவெனின் ஒரு முது மரம். கீர்த்தி மிகு தரு.

#கலை பயில் தரு#, #கலைமலி தரு#, #தமிழர் தலை நிமிர் தரு#.
_____________________________________________________________________________

முரசறைவோன் சேதி சொல்லத் தொடங்கினான். ஆலமரத் தலைவனின் செய்தி.

இத்தால் சகலருமறியத் தருவதாவது....

எங்கள் தலைவர் தனக்கு உறுதுணையாய் இருக்க ஒரு உப தலைவரை நியமிக்கச் சித்தம் கொண்டுள்ளார்.

அவருக்கான தகுதிகளாவன.................

அவர் ஆசிரியராக இருக்க வேண்டும், ஆனால் வகுப்புகளுக்குச் சென்றிருக்கக் கூடாது...

டும். டும். டும். டும்.

சேவைக் காலத்தின் பெரும் பகுதியைச் சிற்றுண்டிச் சாலையிலே செலவிட்டிருக்க

வேண் டும், டும், டும், டும்.

பிரதான தொடர்பாடல் மொழியாக, இன்னாச் சொல் மற்றும் தூஷண வார்த்தைகளைப், பொது வெளியிலும், மைதானத்திலும் மாணவர்களுக்கு பிரயோக மூலம் கற்பிக்கும் ஆற்றல் மிகுந்தவராக இருக்க

வேண் டும், டும், டும், டும்.

புரட்சிகர ஆயுதங்களான, நோட்டீஸ் ஒட்டுதல், வெடி கொளுத்திப் போடுதல், போத்தல் உடைத்தல், யன்னல் கண்ணாடிகளை உடைத்தல் என்பவற்றை மாணவர்களுக்குப் பரிச்சயப் படுத்திய முன்னனுபவம் இருக்க

வேண் டும், டும், டும், டும்.

புரட்சிகர உந்துதலை வழங்கும், மது, பாக்கு, தூள், என்பவற்றின் தொடர்ச்சியான வழங்கலை உறுதிப் படுத்தலின் ஊடாக மாணவர்களின் புரட்சிகரச் சிந்தனையை தொடர்ந்து பேணக் கூடியவராக இருக்க

வேண் டும், டும், டும், டும்.

கடமை நேரத்தில், போதையின் பிடியில் உலா வருவதும், புகை பிடிப்பதும், மேலதிக தகைமைகளாகக் கொள்ளப்

படும், டும், டும், டும்.

மகா சனங்களிலே யாருக்காவது, இத் தகுதிகள் ஒரு சேர இருப்பின், இப் பதவிக்கான விண்ணப்பத்தை......
_____________________________________________________________________________


முரசொலி சடுதியாய் நின்று போனது.

முரசறைவோன் துயர் மிகுதியால் நெஞ்சு வெடித்து இறந்து வீழ்ந்தான்.

ஆல மரத்தின் கிளைகள் பாரிய ஒலியுடன் முறிந்து வீழ்ந்தன.

தன் தீரா முதுமையைத் புறமொதுக்கி, ஒரு தொன்மக் கிழவன் உரத்துச் சொல்லிச் செல்கிறான்..

'இது துர்ச் சகுனம் மக்காள்....'

'ஆல் முறிந்து விழக் கூடாது மக்காள்...'

'சந்ததிக்காகாது மக்காள்...'

அந்த முது குரலால், கல்லறையில் துயில் கொண்டோரின் தூக்கமும் தொலைந்தது.

'சந்ததிக்காகாது மக்காள்...'
_____________________________________________________________________________

அதிகாலைக் கனவு.

பலித்து விடுமோ?

என்னைத் துயர் தின்று தீர்க்க ஆரம்பித்தது.