அருவியாய் வழிந்த வியர்வையைக் காற்று
துடைத்ததோ குடித்ததோ அறியேன்...
(நன்றி: ஆவியோ நிலையிற் கலங்கியது, யாக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன்)
ஏறத்தாழ மூன்று மாத கால இடைவெளியின் பின்னர் எனது வழமையான காலை நடையினை மீண்டும் தொடங்கிய மகிழ்வில் எனது மேசையின் முன்னர் இருக்கிறேன். அருவியாய் வழிந்த வியர்வை உலர்ந்து விட்டது. உடல் இலகுவாகவும், உள்ளம் புத்துணர்வுடனும் இருப்பதாக உணர்கிறேன். இந்தக் காலை நடையை மீண்டும் தொடங்கி ஏழு நாட்கள் ஆகிவிட்டன.
காலை வேளைகளில் நடக்கத் தொடங்கியது நான்கு வருடங்களுக்கு முன்புதான். நான் ஒரு இரவு ஆந்தை. நீண்ட நேரம் இரவில் என்னால் விழித்திருக்க முடியும். ஆனால் அதிகாலையில் எழுவது எனக்கு முடியாத காரியம். ஆகவே காலையில் எழுந்து நடந்து அதன் பின்னர் வேலைக்கு நேரத்திற்குச் செல்வது எனக்குச் சாத்தியமான ஒரு விடயமாக எனக்குத் தோன்றியதில்லை. எனது அலுவலக வேலையோ எப்பொழுதும் கணனியின் முன்னர் அசையாது இருக்கக் கோரும் ஒரு வேலை. ஒவ்வொரு வேலை நாளின் முடிவின் போதும் எனது உடலே எனக்குப் பாரமானதாகத் தோன்றத் தொடங்கியது. எப்பொழுது படுக்கையில் விழலாம் என எதிர்பார்க்கும் ஒரு உடற் களைப்பும் மனச் சலிப்பும் தோன்றத் தொடங்கியது. இவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்றால் ஏதவதொரு வகையில் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. உடற் பயிற்சி தான் ஒரே வழி.
தினமும் வேலையை முடித்த பின்னர் உடற் பயிற்சி செய்யலாம் எனத் தான் ஆரம்பத்தில் முயற்சித்தேன். என்றாலும் வேலையை 'முடிக்கக் கூடிய' நேரம் எனது கட்டுபாட்டில் இருக்கவில்லை. வேறு வழியின்றிக் காலையில் நடக்க ஆரம்பித்தேன்.
ஆரம்பத்தில், ஆறு மணிக்கு எழுவது. ஆறரை மணியளவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஐந்து சுற்று நடப்பது. ஆறு மணிக்கு எழுவது பெரும் வேலை. அவ்வாறு எழுந்து, பின்னர் ஐந்து சுற்று நடந்தால் அது இமாலய சாதனை. அவ்வாறு நடக்கும் ஒவ்வொரு நாளும் மிகத் திருப்தியான நாட்கள்.
இந்துக் கல்லூரி மைதானத்திற்கு மண் நிரப்பித் திருத்தும் வேலை ஆரம்பித்த போது, யாழ்ப்பாணக் கோட்டையின் பின் பகுதியிலிருந்து பண்ணை வீதி வழியாக நடக்கத் தொடங்கினேன்.
அப்பொழுது பண்ணை வீதியின் முதற் பாலம் வரையான வீதி தான் திருத்தப் பட்டிருந்தது. துரையப்பா விளையாட்டரங்கத்தின் அருகில், துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு பண்ணை வீதியின் முதலாம் பாலம் வரை சென்று திரும்புதல் அன்றைய நாளின் மிகத் திருப்தி தரும் விடயங்களில் ஒன்று.
பின்னர் பண்ணை வீதியின் திருத்த வேலைகள் தொடர்ந்த போது 'புதினம்' பார்க்கும் நோக்கத்தில், அவ்வப்போது திருத்தி முடிந்த வீதியின் எல்லை வரை நடக்கத் தொடங்கினேன். அதன் விளைவாக இரண்டாவது பாலம் வரை என் காலை நடை நீண்டது. அப்பொழுதும் அதன் தூரம் எனக்குத் தெரியவில்லை. இரண்டு கிலோ மீற்றர் வரை இருக்கலாம் என நான் நினைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் இரண்டாவது பாலம் வரை போய் வரும் போது 5 கிலோ மீற்றர் நடக்கிறேன் எனக் கற்பனை கொண்டிருந்தேன். அது குறித்துப் பெருமையும் கொண்டிருந்தேன். வீதித் திருத்த வேலைகள் முடியும் தறுவாயில், பண்ணை வீதியில் 'மைல் கற்கள்' (கிலோ மீற்றர் கற்கள்?) நாட்டப் படத் தொடங்கின. அப்பொழுதுதான், இரண்டாவது பாலத்தையும் தாண்டி மண்டைதீவுச் சந்திக்கு அருகில் சென்றால் தான் இரண்டு கிலோ மீற்றர் வரும் என்பது தெரிந்தது.
என் கற்பனைப் பெருமை தகர்ந்து விட, இரண்டாவது கிலோ மீற்றர் கல் வரை சென்று திரும்புவதைப் புதிய இலக்காகக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். மொத்தம் நான்கு கிலோ மீற்றர்கள். அந்தத் தூரம் வழமைக்கு வர மூன்றாவது கிலோ மீற்றர் கல்லை அடைந்து திரும்புவது புதிய இலக்காயிற்று. பின்னர் அது நாலாயிற்று.
2016 டிசம்பர் இறுதியில், வேலை நாட்களில் நாலாவது கிலோ மீற்றர் கல் வரை சென்று திரும்புவதும், அவ்வாறான எட்டு கிலோ மீற்றர் தூரத்தில் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தை ஓடிக் கடப்பதுவும் (துள்ளோட்டம்- Jogging) வழமையாயிற்று. விடுமுறை நாட்களில் இது ஐந்தாவது கிலோ மீற்றர் கல் வரை சென்று திரும்புவது என்றாயிற்று.
தூரம் கூடக் கூட காலையில் எழும் நேரமும் முன் தள்ளிப் போனது. இப்பொழுது அது அதி காலை 4.45 மணியாக இருக்கிறது. காலை 5.15 மணிக்கு நடக்கத் தொடங்கினால் 6.45 மணிக்கு மீண்டும் வீடு திரும்பிவிடலாம்.
எனது தொழிலில் புதிய பொறுப்பை இவ்வாண்டின் ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்ட நாள் முதல் மூன்று மாதங்களாக என்னால் காலை வேளைகளில் நடக்க முடியவில்லை. ஏதொவொன்றை இழந்த துயரம் இந்த மூன்று மாதங்களும். என்றாலும், மீண்டும் முயன்று 'இழந்த வழமையை மீட்டெடுத்து, 'ஆநிரை மீட்ட அர்ச்சுனனாக' மகிழ்வாக இருக்கிறேன்.