திருவாசகத்திலே ‘அச்சப் பத்து’ எனும் பதிகம் உள்ளது. மாணிக்கவாசகர், வெளிப்படையாக எல்லாரும் பயப் படும் விடயங்களில் இரண்டை, ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் கூறி, அவற்றுக்குத் தாம் அஞ்சவில்லை என வெளிப்படுத்துவார்.
பின்னரான அடிகளில், அவர் முதன்மையானதாகக் கருதும் சில விடயங்களைக் கூறி, அவற்றை உதாசீனம் செய்பவர்களைக் கண்டே அஞ்சுகிறேன் என விளம்புவார்.
தறிசெறி களிறும் அஞ்சேன்
தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன்
விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்க ளேத்திச்
சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
கட்டுத்தறியிலே பொருந்தியிருக்கும் ஆண் யானைக்கும் அஞ்சமாட்டேன். நெருப்புப் போன்ற கண்களையுடைய புலிக்கும் அஞ்சமாட்டேன்.
மணம் வீசுகின்ற சடையையுடையவனும் தந்தையுமாகிய இறைவனது, தேவர்களாலும் அடைய முடியாத நெருங்கிய கழலணிந்த திருவடிகளைத் துதித்துச் சிறப்புற்று, இன்பமாக இருக்க மாட்டாத அறிவிலிகளைக் காணின்; ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.
எமது சமூக, அரசியற் சூழ்நிலைகளிலும் நாம் பொதுவாக அஞ்சுகின்ற, வெளிப்படையான அடக்கு முறைகளுக்கு மேலாக, சூட்சுமமாகப் பன்மைத்துவத்துவத்தையும், சரி நிகர் சமானமான சமூக இருப்பையும் கருவறுக்கும் பல நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.
அவற்றைக் காணும் பொழுது தோன்றுவது: அம்ம நாம் அஞ்சும் மாறே!