புதன், 19 மே, 2021

எதை எழுதுவது?


ஒவ்வொரு கணமும் இலட்சக் கணக்கான எழுத்துக்கள் எழுதப் படுகின்றன. வார்த்தைகள் பேசப் படுகின்றன. காண்பியங்கள் படைக்கப் படுகின்றன. எல்லாம் மிகையாகவே நிகழ்வதாகத் தோன்றுகிறது. எழுதப் படுபவை எல்லாம் வாசிக்கப் படுகின்றனவா? பேசப்படுபவைகள் எல்லாம் கேட்கப் படுகின்றனவா? படைக்கப் படுபவை எல்லாம் பார்க்கப் படுகின்றனவா? சிந்திக்கப்படுபவை, வெளிப்படுத்தப் படுபவை எல்லாம் குரல்களாய் (Voice) பரிணமிக்கின்றனவா? அல்லது இரைச்சல்களாய் (Noise) அசௌகரியப் படுத்துகின்றனவா? இவற்றால் அறிதலும், புரிதலும், தெளிதலும், தேர்தலும் நிகழ்கின்றனவா? இல்லையென்றால் எவற்றைச் சிந்திப்பது, எவற்றைத் தெரிவிப்பது, எழுதுவது? பேசுவது?

எமது தேசத்தின் சமகாலத் தமிழ் ஊடக வெளியை நோக்கும் போது இவ்வாறான கேள்விகள் மனதில் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. அச்சு, ஒலி, ஒளி, சமூக, மின்னியல், மெய்நிகர் ஊடகங்கள் உள்ளடங்கிய ஒட்டு மொத்தத் தமிழ் ஊடகப் பரப்பின் இன்றைய நிலையும் குரல்களால் அன்றி இரச்சல்களால் நிரம்பியிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.


*    *    *

"பத்திரிகை என்பது ஒரு கூட்டுப் பிரசாரகனும், கூட்டுக் கிளர்ச்சியாளனும் மட்டுமல்ல, அது ஒரு கூட்டான அமைப்பாளனுமாகும். இவ்விடயத்தில் கட்டப் பட்டு வரும் ஒரு கட்டடத்தைச் சுற்றி எழுப்பப்படும் சாரக் கட்டுக்கு (Scaffolding) அதை ஒப்பிடலாம். அது கட்டடத்தின் உருவரைகளைக் காடுகிறது. கட்டுமானத் தொழிலாளர்களிடையே தொடர்பிற்கு வசதி செய்கிறது. வேலைகளைப் பங்கிட்டுக் கொடுக்கவும், தமது ஒழுங்கமைந்த உழைப்பால் சாதிக்கப் பட்ட பொதுவான விளைவுகளைப் பார்க்கவும் இடமளிக்கிறது." இந்த மேற்கோள் சோவியத் புரட்சிக் காலத்திலே, புரட்சிப் பாவலன் லெனினால் கூறப் பட்டது. ஒரு கட்சிப் பத்திரிகையின் வகி பாகம் குறித்த உரையாடலின் ஒரு பகுதியாக அது அமைந்திருப்பினும், தன்னை ஒழுங்கமைத்து, புத்தி பூர்வமாகச் செயற்பட வேண்டிய நிலையிலுள்ள ஒரு சமூகத்திற்கும் அது சாலப் பெருத்தமாய் அமைந்திருக்கிறது.


*    *    *

எமது சமூகம் தனது செல்நெறியைத் தீர்மானிக்க வேண்டிய, வரலாற்றின் தீர்மனகரமான சந்தியில் இன்று நிற்கிறது. ஆனால் அது தீர்மனகரமானதாக அன்றித், திகைத்து நிற்கும் நிலையிலேயே இன்றிருக்கிறது. அதனுள்ளிருந்து அறிவார்ந்த, ஞானமிக்க, திசை காட்டும் குரல்கள் எழவில்லை. மாறாக உளறல்களும், ஊளையிடலும் கலந்த இரைச்சல்களே அதனுள்ளிருந்து எழுகின்றன. இந்தச் சமூகம், தீர்மானகரமான வரலாற்றுச் சந்தியில், தனது சவக் குழியைத் தானே தோண்டத் தூண்டும் ஒரு பாதையில் செல்ல வேண்டும் என்று விரும்பும் குரல்கள் எதிர் முகாம்களிலிருந்து தெளிவாகவும் தீர்மானகரமாகவும் ஒலிக்கின்றன. அவற்றின் எதிரொலி, இந்தச் சமூகத்தின் இருட்டறைகளின் சுவர்களில் பட்டுத் தெறித்து, உள்ளொலி போல இரச்சல்களை மீறி ஒலிக்கிறது. அந்தப் பாதையும், மலர் வனங்கள் அணி செய்ய, கனத்த உருளையிட்டுச் செப்பனிட்ட 'காப்பற்' வீதி போல உருமறைந்து காத்திருக்கிறது.


*    *    *

எமது சமூகம் இப்பொழுது எவ்வகையான சூழமைவுகளின் பின்னணியில் இருக்கிறது?

அதன் உடனடுத்த புறச் சூழ்நிலை இனத்துவ முரண்பாடுக் கூர்மை காரணமாகத் துருவமயப் பட்டுப் பகை நிலையடந்த, அரசியல்-சமூக-பொருளாதார ஏற்பாடுகளால் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதிலிருந்து எமது நிலம்/ஆள்புலம்-பொருளாதாரம்-ஒருமித்த மனவுணர்வு என்ற மூன்று பிரதான தளங்களைக் குறிவத்து தொடர்ச்சியான சிதைப்பு நடவடிக்கைகள் ஏவிவிடப் படுகின்றன. அரசியலமைப்பு-சட்டம்-அரச நிர்வாகம்- முப்படைச் செயற்பாடுகள்-ஊடக/கருத்தியற் செயற்பாடுகள் எனச் சகலவிதமான வழிமுறைகளினூடாகவும், இந்த மூன்று இலக்குப் பகுதிகளும் தொடர்ச்சியாகத் தாக்கப் பட்டு வருகின்றன.

அதனையடுத்த புறச் சூழ்நிலை, பூகோள அரசியற் போட்டிகளால் கடமைக்கப் பட்டுள்ளது. எமக்கான தெரிவுகள் மட்டுப் படுத்தப் பட்டு, பூகோள அரசியற் போட்டியில் எதாவதொரு தரப்பின் பகடைக் காய்களாக மட்டும் இருப்பது அல்லது முற்றாகப் புறமொதுக்கப் பட்டு, குரலற்றதொன்றாய் நசுங்கிக் கிடப்பது என இரு தெரிவுகள் மட்டும் முன் தெரியும் ஆபத்தான இன்னுமொரு புறச்சூழற் பரிமாணமும் எம்மைச் சூழ்ந்துள்ளது.

எமது அகச் சூழலோ, புறச் சூழலை விட மிகவும் அபாயகரமானதாகத் தெரிகிறது. சமூகம்-பொருளாதரம்-அரசியல்-பண்பாடு என அனைத்து வாழ்வியற் தளங்களிலும், அறம் பிறழ்ந்த, நெறிமுறை தவறிய, 'நாட்டு மிராண்டிகளாய்' படிப்படியாக, ஆனால் உறுதியாக நாங்கள் மாறிவருகிறோம்.எங்களிற் பெரும்பான்மையோர் இந்தத் தற்சிதைவில் ஈடுபடுபவர்களாகவோ, ஊக்கமளிப்பவர்களாவோ மாறி வருகின்றனர். இன்னுமொரு வகுதியினர், இது குறித்த எதுவிதக் கரிசனையுமற்று, தனித்துத் தப்பித்தல் அல்லது புறமொதுங்கல் எனும் உத்திகளைக் கைக்கொள்ளும் தரப்பினராகவுள்ளனர். சமூக நலன் குறித்துக் கரிசனை கொள்பவர்களைப் 'பிழைக்கத் தெரியாதவர்கள்' என நகைத்தபடி முத்திரை குத்திச் செல்கிறது இந்தக் 'கெட்டிக்காரத் தரப்பு'.

*    *    *

இந்தப் பேரவலமான நிலையிலிருந்து தன்னை விடுவித்துத் திகைப்பிலிருந்து மீண்டு தீர்மானகரத்தை நோக்கிச் செல்ல வேண்டுமெனின் எமது சமூகத்திற்கு ஒரே ஒரு வழி தான் உள்ளது. தன்னைச் சூழ நிகழ்பவற்றைப் பூரணமாக அறிதல், அவற்றின் அர்த்தங்களையும், விளைவுகளையும் தெளிவாகப் புரிதல், தான் எங்கே செல்ல வேண்டும் என்பதைத் தெளிதல், அங்கு செல்வதற்கு இருக்கும் வழிகளைச் சீர்தூக்கிப் பார்த்துப் பொருத்தமானதைத் தெரிதல், தெரிந்தெடுத்த பாதையில் தன்னைத் திரட்டிப் பயணித்தல், என்பது தான் அது.


இதன் பின்னணியில் எமது ஊடகங்களின் பணி எவ்வாறானதாக அமைய வேண்டும்?

ஒரு சமூகத்தைப் பாதிக்கும், அதன் வாழ்வியலில் செல்வாக்குச் செலுத்தும் அனைத்துத் தளங்களிலும் நிகழும் சிந்தனைகளையும், உரையாடல்களையும், செயற்பாடுகளையும் தெளிவாக வெளிக்கொணர்ந்து அறிக்கையிடல் ஊடகங்களின் முதலாவது பணி. ஒரு சமூகம் தன்னைச் சூழ நிகழும் அனைத்தையும் தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும். காய்தல் உவத்தல் இன்றி, ஊடக அறத்தின் பால் நின்று, தெளிவாகவும் சரியாகவும் அறிக்கையிடல் ஊடகங்களின் ஆரம்பப் பணி, அடிப்படைப் பணி.


அறிக்கையிடலுக்கு அடுத்த படி சென்று, அவற்றின் அர்த்தங்கள் என்ன? அவை சமூகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும் என்பவை குறித்த உரையாடல்களுக்குக் களம் அமைப்பதுவும், அவற்றின் வெளிப்பாடுகளைப் பரவலாக்கம் செய்வதும் ஊடகங்களின் இரண்டாவது பணி. செய்திகளை வெறும் தகவல்களாகக் (Information) குறுக்காது அவற்றைத் தொகுத்தும் பகுத்தும் ஆய்வு செய்து உள்ளொளி (Insight) வழங்கும் கண்ணோட்டங்களை உருவாக்குவதும் ஊடகங்களின் பணிதான்.


ஒரு சமூகம் தன்னை எவ்வாறதானதாய் மாற்றிக் கொள்ள விரும்புகிறது? இங்கிருந்து எங்கே செல்ல விரும்புகிறது? அது அடைய விரும்பும் மாற்றத்திலும், அதற்கான பயணத்திலும், அந்தச் சமூகத்தினுள்ளும், அதனை சூழவும் நிகழ்பவை எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும்? சாதகமான தாக்கங்களை எவ்வாறு பயன்படுத்துக் கொள்வது? பாதகமானவற்றை எவ்வாறு தவிர்ப்பது? மாற்றம் நோக்கிப் பயணிப்பதற்கு எவ்வாறான தெரிவுகள் உள்ளன? அவை விரும்பத் தக்கவையா? அவ்வாறாயின் சாத்தியப் படுத்தத் தக்கவையா? எனபவை குறித்து ஒரு சமூகம் சதா சர்வ காலமும் உரையாட வேண்டும். உரையாடல்களின் அடிப்படையில், தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காகத் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். இவற்றிற்கான உந்து சக்தியாகவும், களமாகவும் தளமாகவும் ஊடகங்களே இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதுதான் ஊடகங்களின் மூன்றாவது பணி.


தனது உரையாடல்களின் வழி மேற்கொள்ளப் பட்ட தெரிவுகளின் அடிப்படையில் ஒரு சமூகம் செயற்படவும் வேண்டும். தான் அடைய விரும்பும் மாற்றத்திற்கான செயற்பாடுகளிலும் சமூகம் இடையறாது ஈடுபட வேண்டும். அவ்வகையான செயற்பாடுகளுக்கு உந்துதலாகவும், செயற்பாடுகள் குறித்து வெகுசனங்களுக்கு விளக்கமளிக்கும் களமாகவும், அவை குறித்த வெகுசனங்களின் பிரதிபலிப்புகள், பின்னூட்டங்களை வெளிப்படுத்தும் ஊடகங்களாகச் செயற்படுவதும் ஊடகங்களின் நான்காவது பணி.


*    *    *

வரலாற்றின் பெருஞ்சந்தியில் திகைத்து நிற்கும் ஒரு சமூகம் தீர்மானகரமானதான ஒன்றாக மாற வேண்டுமெனின் அச் சமூகத்திற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. **தன்னைச் சூழ நிகழ்பவற்றைப் பூரணமாக அறிதல், அவற்றின் அர்த்தங்களையும், விளைவுகளையும் தெளிவாகப் புரிதல், தான் எங்கே செல்ல வேண்டும் என்பதைத் தெளிதல், அங்கு செல்வதற்கு இருக்கும் வழிகளைச் சீர்தூக்கிப் பார்த்துப் பொருத்தமானதைத் தெரிதல், தெரிந்தெடுத்த பாதையில் தன்னைத் திரட்டிப் பயணித்தல்** என்பதுதான் அது. அச் சமூகம் அவ்வழியிற் செல்வதற்குத் தேவையான அறிவு-புரிவு-தெளிவு-தேர்வு என்பவற்றை அடைவதற்குக் களமமைத்து, உந்துதலையும், ஆற்றுப் படுத்தலையும் வழங்கி கட்டுமானச் சாரங்களாக (Scaffolding) விளங்கும் வரலாற்றுக் கடமை ஊடகங்களுக்கு உண்டு. ஊடகங்களும், ஊடகர்களும் எதை எழுதுவது? என்பதைத் தீர்மானிக்கட்டும்.  

 

(தமிழ் சிவில் சமூக அமையத்தின் இரு திங்கள் இதழான புலரி இதழின், மார்ச்-ஏப்பிரல் 2021 பதிப்பில் வெளிவந்த எழுத்துரு)

1 கருத்து:

  1. The King Casino Online Review 2021
    Learn how to deposit and withdraw at the King Casino Online ボンズ カジノ Casino! ラッキーニッキー Learn how to deposit and withdraw, 더킹카지노 get your bonus, free spins,  Rating: 4.3 · ‎Review by CasinoOnline

    பதிலளிநீக்கு