புதன், 19 மே, 2021

கண்ணீரின் உப்பு

 


 
மின்னழுத்தப் பட்ட சீருடை
அடங்க மறுக்கும் தொந்தி
தடுப்பரணில் கையூன்றி நிற்கிறான்
காக்கி அணிந்தவன்.
 
கனவுகளையும் உறவுகளையும்
தொலைத்த மண்ணில்
ஒரு சொட்டுக் கண்ணீர் விடவும்
முடியாதெனச் சொல்கிறான் அவன்.
 
அவன் கண்ணீர்த் துளிகளை அஞ்சினான்.
குவேனியின் சாபமாய் அவை துரத்தும் என,
ஒரு நாள் அவை வெடிக்கும் என,
அவன் அஞ்சினான்.
அவை அவனைப் பயமூட்டின.
பயம் வெறுப்பை விதைக்கிறது.
 
கண்ணீரை நிறுத்தக்
கைத்துப்பாக்கி போதும் எனவும்
அவன் நம்பினான்.
 
குந்தியழுத மனிதரின் கண்ணீர்
மண் வீழ்கிறது, தடுப்பரணின் அப்புறத்தில்.
யுகங்களாய் வீழும் கண்ணீரில்
உப்புக் கரிக்கிறது மண்.
 
ஒரு புன்னகையின் அல்லது நேசக் கரத்தின்
ஈரத்தில் கரையும் உப்புத்தான்.
என்றாலும் ஈரமிருக்கவில்லை.
 
சப்பாத்துக் கால்களின் கீழ்
ஈரமிலாத் தணலெறிவில்
கொதித்துக் கிடக்கிறது மண்.
 
கரைவதற்கு விதியற்று
நிலச் சூட்டில்
வெடிப்பதற்காய் வீழ்கிறது
கண்ணீரின் உப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக