புதன், 19 மே, 2021

ஆறு மனமே ஆறு

 

தமிழ் மக்களின் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள்: Universe is Actually a 'Multiverse'

1. தமிழ் மக்களுக்குப் பிரச்சனையே இல்லை. சிங்கள மக்களுக்குத் தான் மற்றைய இனத்தவர்களால் பிரச்சனை. சிங்கள மக்களுக்கு இவ்வுலகில் இலங்கை மட்டும் தான் நாடு. 'மற்றவர்களுக்குப்' போகப் பல நாடுகள் உண்டு. தமிழ் மக்கள் பேசுவது 'இனவாதம்'
 
2. தமிழ் மக்களுக்கெனத் தனியான பிரச்சனைகள் இங்கு இல்லை. எல்லா இனச் சமூகங்களினதும் அடித்தட்டு மக்களுக்குத்தான் பிரச்சனை. எனவே இனத்துவம் சார்ந்து போராடாது வர்க்கம் சார்ந்து பேராட வேண்டும். இதனை மறுப்பவர்கள் 'இனவாதிகள்'
 
3. தமிழ் மக்களுக்கெனத் தனியான பிரச்சனைகள் இங்கு இல்லை. இன அடையாளம் நவீன உலகில் தேவையற்றது. மனிதம் எனும் ஒரு புள்ளியில் இணந்து, இருக்கின்ற கட்டமைப்புகளுக்குள்ளேயே பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
 
4. தமிழ் மக்களுக்குப் பிரச்சனைகள் உண்டு. அவை அபிவிருத்திப் பிரச்சனைகளே. சிங்களத் தரப்போடு முரண்பட்டால் அவர்கள் 'எங்களை அபிவிருத்தி செய்ய' மாட்டார்கள். எனவே, அவர்களுடன் முரண்படாமல், அவர்களைப் புண்படுத்தாமல் 'அவர்கள் எங்களை அபிவிருத்தி செய்ய' இணைந்து பயணிப்போம். ஆளுபவர்கள் எவரானாலும் நாங்கள் அவர்கள் பக்கம் நிற்பதே 'செயப்படு பொருள்'.
 
5. தமிழ் மக்களுக்கு இனத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சனைகள் உண்டு. அவற்றை நாங்கள் பக்குவமாகக் கையாண்டு தீர்த்து வைக்கிறோம். எங்களைத் தெரிவு செய்து விடுவதுடன் மக்களின் பணி முடிந்தது. நாங்கள் பாரளுமன்றம், நீதி மன்றம் எனப் பல இடங்களிலும் 'பேசிப் பறைந்து' சிங்கள மக்களையும், அரசையும் புண்படுத்தும் என நாங்கள் கருதும் எவற்றையும் சொல்லாமல் ஒழித்து வைத்து இதைச் செய்வோம். கடந்தகால வரலாற்றையும் எமது நிலைப்பாட்டிற்கமையப் 'பொருள் கோடல்' செய்வோம். 'மக்களை உசுப்பேத்த வேண்டாம்'. அரசியல் என்பது சாணக்கியர்களதும், ஜாம்பவான்களதும் தொழில். அதனை எங்களிடம் விட்டு விடுங்கள்.
 
6. தமிழ் மக்களுக்கு இனத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சனைகள் உண்டு. அப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தார்மீகப் பலத்தைத் தருவது மக்களின் ஆதரவும், நேரடி அரசியற் பங்களிப்பும். மக்களை அரசியல் மயப்படுத்தி (கட்சி மயப் படுத்தி அல்ல), அணி திரட்டி, கொள்கைகளையும் கோரிக்கைகளையும் தெளிவாக உயர்த்திப் பிடித்து அதனூடாக வரும் தார்மீகப் பலத்தில் நீதியான தீர்வைக் கோருவதே எமக்கான வழி.
 
இந்த நிலைப்பாடுகளைக் கொண்டவர்களில், நிலைப்பாடுகள் 1-3 ஐ நம்புபவர்கள் தங்களைத் தமிழ்த் தேசியவாதம் சார்ந்து அடையாளப் படுத்துவது இல்லை.
 
நிலைப்பாடுகள் 4-5 ஐ நம்புபவர்கள், தங்களை (தங்களை மட்டும் தான்) தமிழ்த் தேசியத்தின் காவலர்களாகக் கருதிக் கொள்கின்றனர். 
 
ஆறாவது நிலைப்பாடு இன்று வரை மிகக் குறைந்தளவு நடைமுறைப் படுத்தலுடன், ஏனைய அனைத்து நிலைப்பாடு உள்ளவர்களினதும் மூர்க்கத்தனமான எதிர்ப்புடன், உயிர் பிழைத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக