புதன், 19 மே, 2021

நீரோக்களால் நிறைந்திருக்கும் உலகு


 நீரோக்களால் நிறைந்திருக்கிறது உலகு
புதிய புதிய பிடில்கள்.
வாசித்து எறியப் பட்டுக்கொண்டிருக்கும்
பிடில்களின் குவியலுக்குள்ளிருந்தும்
கிளம்புகிறது நீரோக்களின் இசை.

கொரோணாபுரி எரிந்து கொண்டிருக்கிறது.

'உங்கள் மகிழ்ச்சியைப்
பின் போடாதீர்கள்,
கடன் பட்டும் நுகருங்கள்'
நுகர்வே நித்தியம், நுகர்வே இலட்சியம்'
வங்கியின் நீரோ இசைக்கிறான்
கழுத்துப் பட்டியைச்
சரி செய்தபடி.

கர்ப்பிணிப் பெண்களும்
பணியிடம் வந்தால் மட்டுமே
விற்பனை இலக்கு வசப்படும்
என்கிறான் கோர்ப்பரேட் நீரோ.

'இந்த மாத இலாப இலக்கை அடைந்தவர்
பெரியோர்; அற்றார் இழிந்தோர்'
புலனத்தில் கணந்தொறும்
இசைக்கிறான் இன்னொருவன்.
கரவொலித்துக் கொண்டிருந்தார்கள்
பணியாளர்.

உயிர்க் குமிழியில் சுற்றுலாவலாம்
என்கிறான் ஒருவன்.

பொருளிலார்க்கு
இவ்வுலகம் இல்லை;
முடக்கம் இல்லை அமைச்சரே,
என்கிறான் அரச நீரோ.

வைத்தியசாலைக் கட்டிலின்
விளிம்பில் நீரோக்களின் இசைக்குத்
தன்னை மறந்து தாளம் இடுகிறான்
மூச்சுக்குப் போராடும் ஒருவன்.

தன்னிலை அறியா
மனிதரின் தேசத்தில்
நீரோக்களின் இசை
தேசிய கீதமாக்கப் படுகிறது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக